Tuesday, May 30, 2006

விம்பசார கதை

இந்தப் பெயர்கொண்ட பௌத்தநூல் ஒன்றிருந்ததென்பது நீலகேசி உரையினால் (190-ஆவது பாட்டுரை) அறியப்படும். நீலகேசி உரையாசிரியர் விம்பசார கதையிலிருந்து நான்கு அடிகளை மேற்கோள் காட்டி, ‘இது விம்பசார கதை என்னும் காவியம்; பௌத்தருடைய நூல்; அதன்கட் கண்டு கொள்க’ என்று எழுதியிருக்கின்றார். சிவஞான சித்தியார் என்னும் நூலுக்கு உரையெழுதிய ஞானப்பிரகாசர் (பர : சௌத்தி : மறுதலை. 5-ஆம் செய்யுளுரை) நீலகேசி உரையாசிரியர் மேற்கோள் காட்டிய அதே நான்கடிகளை மேற்கோள் காட்டி, விம்பசார கதையைப்பற்றி அவர் எழுதியவற்றை அவ்வாறே எழுதியிருக்கிறார்.


விம்பசார கதை என்னும் இந்தக் காப்பியம் எத்தனைச் செய்யுள்களையுடையது, எத்தனை அதிகாரங்களையுடையது, இதனை இயற்றியவர் யாவர் என்பதைப்பற்றி ஒன்றும் தெரியவில்லை. ஆயினும், இக்காப்பியத்தின் பெயரைக் கொண்டு, புத்தர் காலத்தில் இருந்தவனும், அவருக்குப் பல விதத்திலும் தொண்டுசெய்து அவரை ஆதரித்துவந்தவனுமான விம்பசாரன் என்னும் அரசனது வரலாற்றினைக் கூறுவது இக்காப்பியம் என்று கருதக் கிடக்கின்றது. விம்பசாரனது வரலாற்றுச் சுருக்கம் இதுவாகும்.


விம்பசாரன் அல்லது பிம்பசாரன் என்னும் அரசன் இராசகிருகம் என்னும் நகரைத் தலைநகராகக் கொண்ட மகத நாட்டை (கி. மு. 540 முதல் 490 வரையில்) அரசாண்டு வந்தான். அக்கால்தில் ஒருநாள், இல்லற வாழ்க்கையைத் துறந்து, துன்பத்தை நீக்கும் வழியைக் காண்பதற்காகச் செல்லும் சித்தார்த்தரை அரன்மனையில் இருந்தபடியே வீதியில் கண்ட விம்பசாரன், அவரை அழைத்துத் தன்னிடம் தங்கியிருக்கும்படி வேண்டினான். சித்தார்த்தர், தாம் செல்லும் நோக்கத்தைத் தெரிவிக்க, அவன் உமது நோக்கம் நிறைவேறிய பிறகு என்னிடம் வரவேண்டும் என்று இரந்து வேண்டினான். சித்தார்த்தர் அதற்கு உடன்பட்டு, அவனிடம் விடைபெற்றுச் சென்றார். பின்னர், சித்தார்த்தர் புத்தரான பிறகு, விம்பசாரனுக்குத் தாம் வாக்களித்ததை நினைத்து, தமது சீடர்களுடன் இராசகிருகத்தின் அருகில் உள்ள சுபதித்த சேதியத்தில் வந்து தங்கினார். இதனையறிந்த அரசன் தனது சுற்றத்தாருடன் சென்று புத்தரை வணங்க, அவர் அவர்களுக்கு உபதேசம் செய்தார். அன்று முதல் அரசன் பௌத்த மதத்தை மேற்கொண்டான். அடுத்த நாள் அரசன் புத்தரையும் அவரது சீடர்களையும் அரண்மனைக்கழைத்து அவர்களுக்கு விருந்தளித்த பின்னர், அவர்கள் தங்குவதற்கு ‘வெளுவனம்’ என்னும் தோட்டத்தைப் புத்தருக்குத் தானமாகக் கொடுத்தான். அன்றியும், அவன் இறக்கும்வரையில் புத்தருக்கும் அவரது சங்கத்தாருக்கும் பற்பல உதவிகளையும் தொண்டுகளையும் செய்துவந்தான்.


இந்த அரசனுக்கு அஜாத சத்துரு என்னும் மகன் ஒருவன் உண்டு. இப்பிள்ளை பிறக்கும்போதே, இவனால் அரசனுக்கு மரணம் நேரிடும் என்று நிமித்திகர் கூறினர்.


புத்தருக்கு மைத்துனன் ஒருவன் இருந்தான். அவன் பெயர் தேவதத்தன் என்பது. அவன் புத்தரது தாய் வழி மாமனது மகன். இந்தத் தேவதத்தன், புத்தர் உலகத்தாரால் போற்றிப் புகழப்படுவதைக் கண்டு பொறாமை கொண்டான். பௌத்த சங்கத்தின் தலைவராக வீற்றிருக்கும் புத்தரை நீக்கிவிட்டு, அவர் இடத்தில் தான் அமர்ந்து பெருமையடைய அவாக்கொண்டான். ஆனால், புத்தரும், விம்பசார அரசனும் உயிரோடுள்ளவரையில் தனது விருப்பம் நிறைவேறாதெனக் கண்டு, அவர்களைக் கொல்லச் சூழ்ச்சி செய்தான்.


தேவதத்தன் சில சித்திகள் கைவரப்பெற்றவனாகலின், அவன் அரசன் மகன் அஜாத சத்துருவிடம் சென்று, அவன் அஞ்சும்படி சில சித்திகளைச் செய்து, அவனைத் தன்வசப்படுத்தி, அரசனைக் கொன்று அரசைக் கைப்பற்றிக்கொள்ளுமாறும், புத்தரைக் கொன்று பௌத்த சங்கத் தலைமைப் பதவியைத் தனக்களிக்குமாறும் அவனுக்குக் கூறினான். இவனது சித்திகளைக் கண்டு இவனிடம் அச்சமும் மதிப்புங் கொண்ட அரசகுமாரன் இவன் கற்பித்த தீச்செயல்களைச் செய்ய உடன்பட்டான்.


தேவதத்தன், அரசகுமாரன் உதவியால் சில வில்வீரர்களை ஆங்காங்கேயிருக்கச் செய்து, புத்தர் பாதைவழியே செல்லும்போது அவரை அம்பெய்து கொல்லுமாறு ஏவினான். புத்தர் வீதிவழியே சென்றபோது, வில்வீரர்கள் அவர்மேல் அம்பெய்ய முடியாதவர்களாகி விறைத்து நின்றனர். பின்னர், அவர்கள் புத்தரிடம் வந்து அவரிடம் உபதேசம் பெற்றுச் சென்றனர். தனது நோக்கம் நிறைவேறாமற் போனதைக் கண்ட தேவதத்தன், தானே புத்தரைக் கொல்ல முடிவுசெய்து, அவர் பாதைவழியே செல்லும்போது பெரும் பாறைகளை மலைமீதிருந்து உருட்டினான். அவை அவருக்குப் பெரிய ஊறு செய்யவில்லையாயினும், காலில் சிறிது காயத்தையுண்டாக்கின. இதனையறிந்த அவரது சீடர்கள் அவரை வெளியே செல்லக்கூடாது என்று தடுத்தார்கள். புத்தர், ‘ததாகதருடைய உயிரைப் போக்க ஒருவராலும் ஆகாது’ என்று சொல்லி, தம் வழக்கம்போல் வெளியே சென்றுவந்தார். பின்னர், தேவதத்தன் அரச குமாரன் உதவியால், ‘நளாகிரி’ என்றும், ‘தனபாலன்’ என்றும் பெயருள்ள மதம்பிடித்த யானையைக் கள்ளூட்டி வெறிகொள்ளச் செய்து, புத்தர் வீதிவழியே செல்லும் போது அவரைக் கொல்ல அதை ஏவினான். அவ்யானை புத்தரைக் கண்டபோது மதமும் வெறியும் தணியப்பெற்று அவரை வணங்கியது.


இவ்வாறு, தேவதத்தன் புத்தரைக் கொல்லச் சூழ்ச்சி செய்திருக்க, அஜாத சத்துரு அரசனைக் கொல்லச் சூழ்ச்சி செய்தான். இதனையறிந்த அரசன் தன் மகனுக்கு அரசாட்சியைக் கொடுத்துவிட்டுத் தான் அப்பதவியினின்றும் விலகிக்கொண்டான். ஆயினும், தேவதத்தன் அரசகுமாரனிடம் சென்று, அரசனைக் கொல்லும்படி வற்புறுத்தினான். அதனைக் கேட்டு, அஜாத சத்துரு அரசனைச் சிறைப்படுத்தி, காற்றோட்டமில்லாத ‘பொதியறை’யில் அடைத்து, அரசியைத் தவிர ஒருவரும் அங்குச் செல்லக்கூடாதென்றும், ஒருவரும் அவனுக்கு உணவு கொடுக்கக்கூடாதென்றும் கட்டளையிட்டான். இவ்வாறு சிறைப்பட்ட விம்பசார அரசனுக்கு அவனது மனைவி அவனைக் காணச் செல்லும்போதெல்லாம் தனது உடையில் உணவை மறைத்துக்கொண்டுபோய்க் கொடுத்துவந்தாள். இது கண்டறியப்பட்டபின், தனது தலையணியில் சிறிது உணவை மறைத்துக் கொண்டுபோனாள். இதுவுங் கண்டறியப்பட்டபோது, இந்த அரசி நீராடித் தன் உடம்பில் ‘சாதுர் மதுரம்’ என்னும் நால்வகை இனிப்பு வகைகளைப் பூசிக்கொண்டு அரசனிடம் சென்றாள். அரசன் அவள் உடம்பில் பூசப்பட்ட இனிப்பை நக்கி உண்டு உயிர் வாழ்ந்தான். இதுவும் கண்டுபிடிக்கப்பட்டு, அரசி விம்பசாரனைப் பார்க்கக்கூடாதென்று தடுக்கப்பட்டது. விம்பசாரன் மனம் கவலாமல் பொதியரையாகிய அச்சிறையில் உலாவிக்கொண்டிருந்தான். இதனையறிந்த அஜாத சத்துரு சில மயிர்வினைஞரை அனுப்பி, விம்பசாரனுடைய பாதத்தைக் கத்தியால் கீறியறுத்து, உப்பையும் புளித்த காடியையும் இட்டுக் கட்டுமாறு கூறினான். இக்கொடுஞ் செயலைச் செய்ய மனமற்றவராக இருந்தும், அவ்வூழியர் அவ்வாறே செய்தனர். இக்கொடுமைகளால் ஏற்பட்ட துன்பத்தைத் தாங்கப் பெறாமல், விம்பசாரன் சிறைச்சாலையில் உயிர்நீத்தான்.


விம்பசாரன் உயிர் துறந்த அதே நாளில், அஜாத சத்துருவுக்கு ஒரு குழந்தை பிறந்தது. அப்போது, குழந்தையிடத்தில் தந்தைக்கு உண்டாகும் அன்புணர்ச்சி அவனுக்கு ஏற்பட்டது. தன்னையும் தன் தந்தை இப்படித்தானே நேசித்திருப்பான் என்று கருதி, அவன் தன் தாயிடம் சென்று இதைப்பற்றி வினாவினான். அஜாத சத்துரு பிறந்தது முதல் விம்பசார அரசன் எவ்வாறு அவனை அன்பாக நேசித்தான் என்பதனையும், எவ்வாறு கண்ணுக்குக் கண்ணாயும் உயிருக்குயிராயும் போற்றிக் காப்பாற்றினான் என்பதனையும் அவள் அவனுக்கு விளக்கிச் சொன்னாள். இவற்றையெல்லாங் கேட்ட அஜாத சத்துரு தான் தன் தந்தையாகிய விம்பசார அரசனைக் கொடுமையாய்ச் சித்திரவதை செய்து கொன்றதை நினைத்து வருந்தினான்.


இவ்வரலாற்றினைப் பொருளாகக் கொண்டு இயற்றப்பட்டது இந்த விம்பசார கதை என்னும் காப்பியம் எனத் தோன்றுகின்றது. இது இயற்றப்பட்ட காலம் தெரியவில்லை. இந்தக் காப்பியத்தினின்று நமக்குக் கிடைத்திருப்பன நான்கு அடிகள்மட்டுமே. அவை பின் வருவன :


‘ உலும்பினி வனத்துள் ஒண்குழைத் தேவி

வலம்படு மருங்குல் வடுநோ யுறாமல்

ஆன்றோன் அவ்வழித் தோன்றினன் ஆதலின்

ஈன்றோள் ஏழ்நாள் இன்னுயிர் வைத்தாள்.’


இச்செய்யுள் நடையை நோக்கும்போது, இந்தக் காப்பியம், மணிமேகலையைப் போன்றே ஆசிரியப்பாவினால் இயற்றப்பட்டிருக்கவேண்டும் எனத் தோன்றுகின்றது.


வலையில் சுட்டது

Saturday, May 27, 2006

சுந்தரமூர்த்தி சுவாமிகள்

பொன்னார் மேனியனே! புலித் தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர் கொன்றை அணிந்தவனே!
மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே !
அன்னே உன்னையல்லால் இனி யாரை நினைக்கேனே?


இந்த பாடலை பாடியவர் சுந்தமூர்த்திதான் ஏன் பாடினார் ?எதற்குப் படினார்?



"
சுந்தரமூர்த்தி சுவாமிகள் சோழ நாட்டு ஸ்தலங்களுக்கு யாத்திரை செய்து கொண்டிருந்தபோது ஒரு நதியைக் கடக்க வேண்டியதாயிருந்தது. நதியைத் தாண்டி அப்பால் செல்லத் தொடங்கினார். அப்போது, 'சுந்தரம்! என்னை மறந்தாயோ!' என்று ஒரு குரல் கேட்டது.

சுந்தரமூர்த்தி திடுக்கிட்டார் அது தம்மை ஆட்கொண்ட இறைவனுடைய குரல் என்பதை உணர்ந்தார். பக்கத்தில் இருந்த சீடர்களைப் பார்த்து "இங்கே சமீபத்தில் எங்கேயாவது சிவன் கோயில் இருக்கிறதா?" என்று கேட்டார்.

"
ஆம், சுவாமி! அந்தக் கொன்னை மரங்களின் மறைவில் மழபாடி கிராமத்துச் சிவன் கோயில் இருக்கிறது!" என்று சீடர்கள் சொன்னார்கள்.

உடனே சுந்தரமூர்த்தி அங்கே சென்றார்; பூத்துக் குலுங்கிய கொன்னை மரங்களின் மறைவில் ஒரு சிறிய கோவில் இருந்தது. சுந்தரமூர்த்தி அங்கே சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு மனமுருகிப் பாடினார். அன்றொரு நாள் தன்னைத் தடுத்தாட்கொண்டது போல், இன்றைக்குத் தன்னைக் கூப்பிட்டு அருள்புரிந்த கருணைத் திறனை வியந்தார்.

'
சுவாமி! தங்களை நான் மறந்து விடுவேனா? என்ன கேள்வி கேட்டீர்கள்? தங்களை மறந்துவிட்டு வேறு யாரை நினைப்பேன்?' என்னும் கருத்து அமைத்து,

மேற்கண்ட பாடலைப் படினார்.

பொன்னியின் செல்வன்

தேரின் அச்சு முறிந்து இருவர் மரணம்

திருச்சிராப்பள்ளி பெரம்பலூர் அருகே தேரொட்ட திருவிழாவில் கோயில் தேர் அச்சுமுறிந்து 2 பூசாரிகள் பலியாயினர்.

தேரை வடம் பிடித்து இழுப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு தேரின் முன்புறம் இரண்டு நாகப்பாம்புகள் பொதுமக்கள் முன்னிலையில் படம் எடுத்து ஆடியுள்ளது . இதைப் பார்த்த பொதுமக்களில் சிலர் ஏதோ அசம்பாவிதம் நடக்கப் போகிறது என்று கூறியுள்ளனர். அவர்கள் கூறியவாறே பின்னர் சிறிது நேரத்தில் தேர் அச்சு முறிந்து கவிழ்ந்தது.


Wednesday, May 24, 2006

காற்று வெளி

வலைப்பதிவர் பெயர்: என்னார்
வலைப்பூ பெயர் : அரிவானந்தம், குட்டிராஜா, ஆன்மீகம்
உர்ல் :www.ennar.blogspot.com ,www.merkondar.blogspot.com , www.aanmeekam.blogspot.com (எத்தனை வலைப்பூக்கள் இருந்தாலும் அனைத்தையும் ஒரே பதிவில் அளிக்கலாம்)
ஊர்: துவாகுடி (துழாய்குடி)திருச்சிராப்பள்ளி
நாடு: இந்தியா
வலைப்பூ அறிமுகம் செய்தவர்: நானேதான் கண்டு கொண்டேன் (வலைமேய்ச்சலில்)
முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் : 29-5-05
இது எத்தனையாவது பதிவு: தெரியவில்லை
இப்பதிவின் உர்ல்: http://aanmeekam.blogspot.com/2006/05/blog-post.html
வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: எனது கருத்துக்களை தங்களைப்போன்றவர்களுடன் பங்கிட
சந்தித்த அனுபவங்கள்: என்னத்தைச் சொல்ல?
பெற்ற நண்பர்கள்:சிலர்
கற்றவை: கையளவு
எழுத்தில் கிடைத்த சுதந்திரம்:யாரைவேண்டுமானலும் ஜல்லியடித்தல் ( நானல்ல மற்றவர்கள்)
இனி செய்ய நினைப்பவை: நல்லவை
உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு:சொல்லுவதற்கு ஒன்றும் இல்லை
இன்னும் நீங்கள் சொல்ல நினைக்கும் ஒன்றைச் சேர்க்கலாம்: இது வே அதிகம்

இந்த வரலாற்று சிறப்புமிக்க பதிவுக்கு(ரொம்ப ஓவரா இல்லைன்னு தான் நினைக்கிறேன்) ஆமாம்
வலைப்பதிவர்களின் ஆதரவினை நன்றியுடன் எதிர்பார்க்கிறேன்.


Friday, May 12, 2006

என் ஐயம் தெளிவிப் பாருண்டோ - 6 -

இந்த கணக்கு சரியாக இருக்குமா? எனக்குச் சொல்லுங்கள்

ராமர் பிறந்த தினம்
டாக்டர் பி.வி.வர்த்தக் என்பவரின் ஜோதிட கணக்கின்படி கி.மு.7323, டிசம்பர் 4ம் தேதி செவ்வாய் கிழமையன்று ராமபிரான் பிறந்ததாக கூறுகிறார். கி.மு.7306, நவம்பர் 29ம் தேதி வியாழக்கிழமை ராமர் காடு சென்றார். அவர் காடுசென்ற 6ம்நாள் புதன்கிழமை (டிசம்பர் 5ம் தேதி) தசரதர் இறந்தார். கி.மு.7292, நவம்பர் 15ம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று ராவணன் இறந்தான். கி.மு.7292 டிசம்பர் 5ம் தேதி சனிக்கிழமையன்று ராமன் அயோத்தி வந்தார். இந்த கணக்கின்படி ராமன் 110 ஆண்டுகள் வாழ்ந்திருக்க வேண்டும் என வர்த்தக் கூறுகிறார்.

Friday, May 05, 2006

என் ஐயம் தெளிவிப் பாருண்டோ - 5 -

கரிகாலன் காவிரிக்கு கரை கட்டுவித்தான் . சிற்றரசர் கலரும் அவன் ஆணையை ஏறறுக் கரை அமைத்தனர். பிரதாபருத்திரன் என்னும் மன்னன் காவிரிக்குக் கரை எடுக்க வராமல் ஆரவாரித்தான். அவனுக்கு நெற்றியிலும் ஒரு கண் இருந்ததாம்! கரிகாலன் பிரதாபருத்திரனது படத்தை எழுதி வருமாறு ஓவியனுக்குக் கட்டளையிட்டான். படம் வரையப்பட்டு வந்தது. அதில் அவனுக்கு மிகையாக நெற்றியில் இருந்த ஒரு கண்ணைக் கரிகாலன் தனது பாதத்தால் மிதித்து அழித்தான். அப்பொழுதே பிரதாபருத்திரன் நெற்றிக் கண்ணை இழந்தான். செருக்கு அழிந்த பிரதாபருத்திரன் கரிகாலன் கட்டளையை நிறைவேற்றினான்.
197
தொழுது மன்னரே கரைசெய் பொன்னியில்
தொடர வந்திலா முகரி யைப்படத்
தெழுது கென்றுகண் டிதுமி கைக்கணென்
றிங்க ழிக்கவே அங்க ழிந்ததும். 20
கலிங்கத்துப் பரணி
முக்கண்ணன் சிவன் கேள்விப்பட்டோம் சரி மானிடருக்கு முக்கண் இருக்குமா?

Wednesday, May 03, 2006

என் ஐயம் தெளிவிப் பாருண்டோ - 4 -

சிதம்பர ரகசியம் என்றால் என்ன?


சிதம்பர ரகசியம் என்று ஒரு பெரிய சொல் வழக்கு உள்ளது. அது சிற்சபையினுள் உள்ள சபாநாயகரின் வலப்புறம் உள்ள சிறு வாயில் உள்ளது. அதன் திரை நீக்கி ஆரத்தி காட்டப் பெறும். அதனுள் ஏதும் காணப் பெறாது. தங்கத்தாலான வில்வ இலை மாலை தொங்க விடப் பட்டு இருக்கும். மூர்த்தியின் சிலையேதும் இராது. இங்கு இறைவன் ஆகாய உருவில் இருக்கிறார் என்பதே இதன் இரகசியம் ஆகும்.


சிதம்பரத்தில் இரகசியமாய் விரியும் ஆகாச லிங்க வடிவம்....

http://www.varalaaru.com/Default.asp?articleid=28


Tuesday, May 02, 2006

என் ஐயம் தெளிவிப் பாருண்டோ - 3 -

முத்து எங்கு கிடைக்கம் கடலில் மட்டுமா? இல்லை மேக கூட்டத்திலுமா?,

இதோ வயல் காட்டில் விளையும் கரும்பிலும் முத்து கிட்டியதாம்!!!!!


மெய்யாலுமா? தெரிந்தவர்கள் கூறுமின்கள்


ஒருநாள் சடையவள்ளல் சோழனதவைக்களத்தே போந்து சிறக்கவீற்றிருந்தபோது, பெருங்குடி வணிகனொருவன், கடலிற்பட்ட அருவிலையுடைய பெருகொளிப்பருமுத்துகள் பலவற்றைக் கொணர்ந்து சோழன் திருமுன்னர் வைத்து, 'இவை முடியுடை வேந்தர்க்குத் தக்கன' என்று கூறாநிற்ப, அரசன் அவற்றைக் கண்டு மகிழ்ந்து புகழ்ந்தானாக, அதுகண்ட சடையவள்ளல் கழனிபடு வளத்தையே மேம்படுத்தேத்தி, அக்கழனிபடுமுத்தைக் போல இவை பெரியனவும் ஒள்ளியனவுமாகா' என்று சோழற்கு மாறுரைத்தனன்.

அதுகேட்ட சோழன் கழனியில் முத்துப்படுவது கேட்டறிவதன்றி யாம் கண்டறிவதில்லை என்ன, சடையவள்ளல் அது நுமக்கரிதாவதன்றி எமக்கன்று; நுமக்கு யான் அதுகாட்டுவேன் என்று, தமது கழனியிற் கமுகுபோலப் பருத்துவளர்ந்துள்ள கரும்புகளில் ஒரு சிலவற்றைக்கொணருவித்து, அவற்றுட் கோணிக் குறுகியதொரு கரும்பினை எடுத்து அதனொரு கண்ணை முறித்தனன். அதினின்று பல முத்துகள் தெறித்து வீழ்ந்து, அரசனது முடிமணியொளியினும் பேரொளி பரப்பின.

அப்போது சடையவள்ளல் தன் கழனிகளிலொன்றில் ஆயிரக்கணக்கான கரும்புகளில் ஒரு சிலவற்றானாயதொரு சிறுகட்டின்கணிருந்தவற்றில் ஒரு கோணற் சிறுகரும்பின் ஒரு கண்ணிலிருந்தன இவை என்றும், இங்ஙனமே தன்கழனிதோறும் உள்ளனவற்றையெண்ணிற் கணக்கிலவாமென்றும் அரசற்கு எடுத்துக் கூறினன். அதுகேட்டு, அரசவையிலிருந்த சான்றோரெல்லாம் 'சடையன் கழனிபடுவ கடல்படா' என்று புகழ்ந்தனர். கரும்பினின்று தெறித்த முத்துகளெல்லாம் ஒளியானும் பருமையானும், வணிகன் கொணர்ந்த கடல்படு முத்துகளையும் வென்று சிறத்தலை அரசன் கண்ணாரக்கண்டு, முகத்தான் வியந்து, அகத்தாற் சடையனது செல்வத்தில் அழுக்காறு கொண்டனன் என்ப.


http://www.tamilnation.org/literature/pmunicode/mp202.htm