Wednesday, March 29, 2006

ஜமதக்னீ முனிவர்

மதக்னீஸ்வரர் ஆலயம் உள்ள கிளாங்காடு முதலில் கீழ் வெண்காடு எனப் பெயர் பெற்றிருந்ததாம்.

‘‘கிளா’’ மரங்கள் சூழ்ந்த வனப்பகுதியாய் இருந்ததால் ‘‘கிளாங்காடு’’ என்றும் மாறியதாகவும் வரலாறு. ஊரின் தென்புறத்தில் அனுமன் நதியும், வடபுறத்தில் கரும்புச்சாறு நதியும் (தற்போது கருப்பாநதி) பாய்ந்தோடி வளம் சேர்க்க, இரு நதிகளுக்கும் இடையிலுள்ள சுமார் மூன்று ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்த கோவிலுக்குள் அமிழ்த சொரூபியாய், ஆனந்தச்சித்தனாய் லிங்க வடிவுருவில் லெளகீக வாழ்வுக்கு அருள் பாலிக்கும் ஜமதக்னீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.

இந்த இடத்தில் ஜமதக்னி முனிவரும், அவரது பத்தினி ரேணுகாதேவியும் மகன் பரசுராமன் மற்றும் முனிவர்களும் வாழ்ந்து வந்தனர். வினாயகரின் அருளால் ஆயிரம் கைகள் பெற்ற கார்த்த வீரிய அர்ச்சுனன் எனும் மன்னன், ஜமதக்னி முனிவர் வாழ்ந்த காட்டுப் பகுதிக்கு வேட்டையாடவந்தான். உச்சிநேரத்தில் களைத்து உணவு கிடைக்காமல் திண்டாடிய மன்னன், ஜமதக்னி முனிவரை சந்தித்தான்.

மன்னனுக்கும் பல்லாயிரக்கணக்கான படைவீரர்களுக்கும் பல்சுவை உணவு அளித்தார், மாமுனிவர்.

எப்படி இது சாத்தியமானது என அரசன் கேட்க, அத்தனைக்கும் காரணம் காமதேனு என்னும் தெய்வீகப் பசுதான் என, அடுத்து வரப்போகும் ஆபத்தை உணராமல் உரைத்தார் மாமுனிவர். நாடாளும் மன்னன் மனதில் சில நச்சு யோசனைகள் தோன்ற, காமதேனுவை என்னோடு அனுப்புங்கள் என கெஞ்சியும் பிறகு மிஞ்சியும் பேசினான்.

முனிவர் ஜமதக்னியோ, ‘‘அது தெய்வீகப்பசு... ரிஷிகளிடம் மட்டுமே வாழும். அதை உன்னோடு அனுப்பவும் முடியாது.’’ என்று மறுத்தார்.

அறிவிழந்த மன்னன் காமதேனுவைக் கைப்பற்ற தன் படைகளுக்குக் கட்டளையிட, மாமுனிவர் காமதேனுவுக்கு கண் ஜாடை காட்டினார் அவ்வளவுதான் தனது கொம்புகளை சுழட்டி சிலுப்பிய வேகத்தில் மன்னனின் படைகளுக்கு எதிராக மாபெரும் படையொன்று உருவெடுத்து மன்னனின் படைகளுக்கு மரணம் கொடுத்தபின் மறைந்து போயிற்று.

ஆயிரங்கைகள் கொண்டு தடுத்தும் அவமானம் நிகழ்ந்துவிட்டதே என வருந்திய மன்னன் வஞ்சம் வைத்தான்.

கிளா மரங்கள் அடர்ந்த சோலைக்குள் ஜமத்னி முனிவர் சிவலிங்கத்தின் முன் தியானத்தில் ஆழ்ந்திருந்தார். எதிர்பார்த்த சூழ்நிலை இயற்கையாய் கிடைக்க, வஞ்சம் வைத்த மன்னன் மாமுனியை சிரச்சேதம் செய்துவிட்டான். அப்போது அங்கு வந்த ரிஷிபத்தினியை இருபத்தொரு முறை வாளால் குத்திவிட்டு விரைந்தான்.

மகன் பரசுராமன் வரும்வரை தன் உயிரைத் தக்க வைக்குமாறு தெய்வத்தை வேண்டினார் ரிஷி பத்தினி. அதற்குள் பரிதவித்து வந்து சேர்ந்தான் பரசுராமன். நடந்ததையெல்லாம் மகனிடம் சொன்ன பின் உயிர் நீத்தார் ரேணுகாதேவி.

ஈமச்சடங்குகள் முடிந்த பதினாறாம் நாள் ‘‘காளியாக’’ அவதாரம் எடுத்த ரேணுகா தேவி, மகன் முன்தோன்றி அவனுக்கு மழு (கோடரி) ஆயுதம் தந்து மறைந்தாள். இருபத்தோரு தலைமுறைக்கு சத்திரிய வம்சத்தை கருவறுக்க சபதம் செய்தான் பரசுராமன். அதை நிறைவேற்றியபின், தன் தந்தை வழிபட்ட சிவமூர்த்திக்கு ஓர் ஆலயம் அமைத்தான்.

இப்போதும் இந்த சிவாலயத்தின் ஈசானிய மூலையில், ரேணுகாதேவி தனியாக வீற்றிருக்கும் சன்னதி இருக்கிறது. கங்கையைத் திரட்டி வந்து ஜமதக்னி முனிவரின் பூஜைக்கு உதவியதால் ‘‘கங்கைக்கு வாய்த்த அம்மன்’’ என்ற காரணப் பெயரும் இப்போது நிலவுகிறது.

ஜமதக்னி முனிவர் பூஜித்த சிவலிங்கம், கால நிகழ்ச்சிகளில் கட்டுண்டு, புதர்மண்டி, பூமிக்குள் அமிழ்ந்துவிட்டது. பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின்பு தென்காசி காசி விசுவநாதர் ஆலயத்தைக் கட்டிய மன்னன் பராக்கிரம பாண்டியன் இவ்வழியாக குதிரையில் சென்றபொழுது கால் இடறி கீழே விழுந்த குதிரை எழுந்திருக்க மறுத்தது. அப்போது அசரீரியின் வாக்கு மன்னனுக்கு பூமியைத் தோண்டுமாறு கட்டளையிட, உடனே தன் படைகளைப் பணித்தான் மன்னன் பராக்கிரமன். அப்படித் தோண்டிய போது கிடைத்தது தான் ஜமதக்னி முனிவரால் பூஜிக்கப்பட்ட இந்த சிவலிங்கம். அதன் பலனாகவே இறைவனுக்கும் ஜமதக்னீசுவரர் எனவும் பெயரிட்டனர்.

ஜமதக்னீஸ்வரராய் வீற்றிருக்கும் இறைவன் கிழக்கு நோக்கியும், அதையொட்டி ஊரைபார்த்து தெற்கு நோக்கி அருள் பாலிக்கும் நல்ல மங்கை அம்பாளையும் சுற்றுவட்டார மக்கள் வணங்கி பல பேறுகளைப் பெற்றுள்ளனர்.

மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப் படும் முன்பு சில காலம் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் இருந்த இந்தக் கோவிலை கேரள தேவசம் போர்டு நன்கு கவனித்து வந்தது. இதற்கு ஆதாரமாய் வெளிச்சுற்று பிராகாரத்தில் தனது சங்கு முத்திரையை பதித்துள்ளது அப்போதைய திருவிதாங்கூர் தேவசம் போர்டு.

தற்போது கோயிலின் உட்புறமுள்ள தீர்த்தக்கிணறு தூர்ந்து, பிராகாரங்கள் மற்றும் உள்வெளிகள் தக்க பராமரிப்பின்றி கொஞ்சம் தடுமாறிப்போயுள்ளது. பக்தர்கள் இந்த அரிய கோயிலை ஒரு பொக்கிஷமாகப் பாதுகாக்க வேண்டும் என்றுதான் விரும்புகிறார்கள். அதற்கும் அவன் அருள்தானே வேண்டும்!

நெல்லை மாவட்டம் தென்காசியிலிருந்து வடகிழக்கு திசையில் சுமார் எட்டு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் கிளாங்காடு என்னும் கிராமத்திலுள்ளது இக் கோவில்.
குமுதம்
_ செந்தில் குமார

No comments: